ராகு கேது பெயர்ச்சி 2022 : கோடீஸ்வரர் தரும் தரப்போகும் ராகு கேது – யாருக்கு பரிகாரம்

நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. நிகழும் பிலவ வருடம் பங்குனி மாதம் 29ஆம் தேதி 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு யோகங்கள் தேடி வரும் யாருக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மா வள்ளல் ராகு பகவான். பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருப்பவரைத் திடீரென கோடீஸ்வரர் ஆக்குபவரும் ராகு. கெட்ட சகவாசங்களுக்கும் காரணம் ராகுதான்.

ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர் கேது பகவான். ஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர். ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்கு தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள்.

ராகு கேது பெயர்ச்சி

குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியைப் போலவே ராகு – கேது பெயர்ச்சியும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக இருக்கிறது. ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு – கேது பெயர்ச்சி என்கிறோம். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார்.

ராகு பகவான்

ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும், இராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும் பாம்பு என அழைக்கப்படும், இராகு போக காரகன் ஆவார். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன் ஆவார். இவர்கள் எந்த பாவத்தில் அமர்கிறார்களோ அந்த பாவத்தை தாக்கம் அடையச் செய்வர். அதுபோல் இவற்றுடன் இணையும் கிரகங்களின் காரகத்துவங்களிலும் தாக்கம் ஏற்படும். மனிதத் தலையும் பாம்பு உடலையும் கொண்ட இராகு கருமை நிறத்தவர், நீண்டு நெடியவர். குரூரமான குணம் உடையவர். அற்புதமான செயல்களை உருவாக்கிக் காட்டக் கூடிய ஆற்றல் மிக்கவர் இராகு ஆவார். திருநாகேஸ்வரத்தில் இராகு தனது இரு தேவியர்களான நாகவல்லி, நாக்கன்னி சமேதராய், உள்பிரகாரத்தில் கோவில் கொண்டு அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார். இத்திருத்தலமே இராகு பரிகாரத்திற்கு முதலிடமாகவும், சிறந்த இடமாகவும் கருதப்படுகிறது.

கேது பரிகாரத்தலம்

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்களான இராகு – கேதுவுக்கு என தனியாக வீடுகள் ஒதுக்கப்படவில்லை. எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டு அதிபதியின் குணத்தை கிரகித்துக் கொள்வர். இவர்கள் மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் பின்னோக்கியே ராசி மண்டலத்தை வலம் வரக் கூடியவர்கள். கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கேது ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் எமகண்டத்தில் வழிபட்டால் மிகவும் சிறப்பானது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *